ஆட்டோவில் அழைத்து சென்று மூதாட்டியிடம் செயின் பறிப்பு : 3 பெண்களுக்கு வலை

கீழ்ப்பாக்கம்: ஆட்டோவில் நைசாக ஏற்றிச் சென்று மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஷெனாய் நகர், வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி (70). இவரது மகன் குமார் (48), சிறுநீரக பாதிப்பு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க, நேற்று முன்தினம் மாலை ரங்கநாயகி மருத்துவமனைக்கு புறப்பட்டார். இவர், பஸ்சுக்காக காத்திருந்தபோது, ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து இறங்கிய 3 பெண்கள், ரங்கநாயகியிடம் ‘‘இந்த நேரத்தில் பஸ் குறைவாகவே இயக்கப்படும். வயதான காலத்தில் நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள். வாருங்கள் நாங்கள் ஆட்டோவில் அழைத்து செல்கிறோம்,’’ என தெரிவித்தனர். இதை அவர் நம்பி, அவர்களுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.

வழியில் ரங்கநாயகியிடம், ‘‘உங்களது கழுத்தில் உள்ள செயின் அறுந்திருப்பதாகவும், அதை கழற்றி பையில் பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்’’ என்றும் அந்த 3 பெண்கள் கூறினர். இதையடுத்து செயினை கழற்றி பையில் வைத்துக் கொண்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறங்கினார். மருத்துவமனைக்குள் சென்றதும், பையை பார்த்தபோது, செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆட்டோவில் வந்த 3 பெண்கள் நூதன முறையில் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: