கொடைக்கானல்: கொடைக்கானலில் 2 பெண்களை யானை தாக்கியதில் ஒருவர் பலியாகி இருக்கிறார், மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடைக்கானல் அருகே மன்றக்கால்வாய் கிராமத்தில் தோட்டத்து வேலைக்கு சென்ற இரண்டு பெண்களை யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அப்பகுதியில் காப்பித்தோட்டத்தில் வேலை செய்த சரஸ்வதி மற்றும் ஜெயரத்னம் ஆகிய இருவரையும் யானை மிதித்து இருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஜெயரத்னம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து இருக்கிறார். மேலும் படுகாயமடைந்த சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் வனத்துறை சார்பில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் கீழ்மலைப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து நீடிப்பதால் இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.