சென்னை: சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற 3 நாட்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 29ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுவிநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.