சென்னை: கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் பூமி ஆராய்ச்சிக்காக கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களை கடந்த 25ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த இருந்தது. ஆனால், வானிலை மாற்றத்தால் அன்று விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. எனவே திட்டமிட்டப்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டை இஸ்ரோ இன்று காலை 9.28 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த உள்ளது.