டிரானா: அல்பேனியா நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்த சேதம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அல்பேனியாவை உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணிக்கு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. தலைநகர் டிரானாவில் வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் குவிந்தனர். அல்பேனியாவின் ஷிஜாக்கிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அல்பேனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.