திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குபேர லிங்க சன்னதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவண்ணாமலையில், அண்ணாமலையாரை தேவர்கள் வலம் வந்து துதித்ததாக புராணம் தெரிவிக்கிறது. அந்த வகையில் செல்வத்தின் அதிபதியான குபேரன் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இங்கு வழிபட்ட பின்னர் கிரிவலம் செல்வதாகவும் ஐதீகம். இந்த குபேர லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அந்த பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன்படி, கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியான நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிைய தரிசிக்க கோவை, திருப்பூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, திருவண்ணாமலையில் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குபேர லிங்கத்தை தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.