மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 308 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 79.84 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2019ம் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க மாநகராட்சி அலுவலர்களால் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வளசரவாக்கம் மண்டலம், கோட்டம் 143 முதல் 155 வரையுள்ள அனைத்து கோட்டங்களுக்கு உட்பட்ட வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம், மதுரவாயல், போரூர் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள்,

உணவு விடுதிகள், சாலையோர  கடைகள் ஆகியவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த ஆய்வு கடந்த 3 தினங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, 463 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 60 நிறுவனங்களுக்கு 54,200 அபராதம் விதிக்கப்பட்டு, 67 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழக அரசால் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்ட 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 28,997 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ₹9,54,700 அபராதம் விதிக்கப்பட்டு, 18 டன் வரையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் இதுவரை 3,42,994 வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 308 டன் வரையிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்மந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ₹79.84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: