மரக்காணம் : மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் தங்களது விளை நிலத்தில் மணிலா, தர்பூசணி போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். இப்பகுதியில் இது வரையில் போதிய அளவிற்கு பருவமழையும் பெய்யவில்லை. இதனால் இங்குள்ள ஏரிகள் மற்றும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் இவர்கள் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை நடவு செய்யாமல் குறைவாக தண்ணீரில் வளரும் சாமந்தி பூ உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர். இதனால் இப்பகுதியில் பூ சாகுபடியும் அமோகமாக உள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் விழாக்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வருமானம் கிடைப்பதால் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.