கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை : கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இதற்கு முந்தைய விசாரணையில் கோயிலுக்கு தேவைப்படாத நிலத்தை ஏழைகளுக்கு வழங்குவது குறித்தும் கோயிலுக்கு தேவைப்படாத நிலத்துக்கு உரிய பணத்தை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக  உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அடுத்தக்கட்ட விசாரணையில், கோயில் நிலங்களில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல்  பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

தமிழக அரசின் உத்தரவுக்கு  இடைக்கால தடை

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: