புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா கைது குறித்து மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்வர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், நகர் மக்களவை தொகுதி எம்பியான பரூக் அப்துல்லாவை குளிர்க்கால கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல், மத்திய அரசு தொடர்ந்து காவலில் அடைத்து வைத்திருப்பதற்கு பல்வேறு கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பரூக் அப்துல்லா கைது குறித்து, மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பரூக் அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.