சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் அவரது தாயாரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது தாயாரிடம் விசாரிக்க கேரளாவிற்கு விரைந்து இருக்கிறார்கள். ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்களிடம் 2 - வது நாளான இன்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டமாக பாத்திமா தற்கொலை விவகாரத்தில் கேரளாவில் அவரது சகோதரி மற்றும் தாயாரை நேரடியாக சென்று விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் பாத்திமாவின் தோழிகள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதால் அவர்களிடமும் நேரடியாக சென்று விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.

இதில் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது பாத்திமாவின் செல்போன் தான், அதை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் மெசேஜஸ்கள் உள்ளிட்ட கடந்த 28 நாட்களாக அவர் பயன்படுத்திய அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஐஐடி-யில் படிக்கும் மற்ற மாணவர்கள்களுக்கு பேராசிரியர்கள் இதுபோன்ற தொந்தரவு கொடுத்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து சைபர் ஆய்வுக்கு அனுப்பட்ட அந்த செல்போனின் ஆய்வக முடிவுக்காக தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை அறிய அதுதான் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தற்கொலை கடிதம் என்பது செல்போனில் இருந்து வந்ததுதான் என்பதை உறுதி செய்ய ஆதாரமாக கொண்டுவரப்பட வேண்டும், அதே நேரத்தில் கடந்த காலத்தில் அந்த செல்போனில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறாரோ அவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக செல்போன் ஆய்வக முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணையானது நடைபெறும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: