பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை : புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு

டெல்லி : பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல்

நாடு முழுவதும் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் 75 சதவீத டாக்டர்கள் பணியில் இருக்கும்போது தாக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எச்சரித்தல் போன்றவையும் நடப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதோடு மருத்துவமனைகள் மீதும் அதிகமான அளவில் வன்முறை கும்பல் தாக்குவதாகவும் தெரிவித்து இருக்கிறது.மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் ஜுனியர் டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 வரைவு மசோதாவை உருவாக்கும் பணிக்காக 8 பேர் கொண்ட குழு

இதையடுத்து, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான வன்முறை மற்றும் சேதத்தை தடுக்கும் வரைவு மசோதாவை உருவாக்கும் பணிக்காக 8 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சகம் நியமித்திருந்தது.இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம், எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் உருவாக்கிய வரைவு மசோதாவை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சகம் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரியுள்ளது.

10 ஆண்டு வரை சிறைத் தண்டனை

இந்த வரைவு மசோதாவின்படி, பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலத்த காயம் ஏற்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.மருத்துவமனையில் வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சேதமடைந்த பொருளுக்கு சந்தைவிலையை விட இருமடங்கு தொகையும், தாக்கப்பட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடும் வழங்கப்படும்.

இந்த வரைவு மசோதாவை இறுதி செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற அரசு முனைப்புடன் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நோயாளிகள் உயிரிழப்பு சம்பவங்களில் மருத்துவர்கள்மீது ஆங்காங்கே தாக்குதல் நடைபெறும் சூழ்நிலையில், புதிய சட்டத்திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Stories: