சென்னை: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தினகரன் அதிமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போது எழுந்த பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பார்வையிட அனுமதி கோரி திமுக வேட்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை சார்பில் சீல் வைக்கப்பட்ட உறையில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரரால் விசாரணையின் உண்மை விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் டைரியும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை அறிக்கையை திமுக வேட்பாளர் பார்வையிட அனுமதிப்பது குறித்து டிசம்பர் 18க்குள் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.