சென்னை: பள்ளிப் பேருந்து மோதி, சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் தாலுகா சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த மாயவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய் நல்லூரில் உள்ள தனியார் பள்ளியான போன் நேரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் எனது 7 வயது மகன் முகுந்தன் இரண்டாம் வகுப்பு படித்தான். கடந்த ஜூன் 1ம் தேதி பள்ளி சென்று விட்டு, பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினான். அதிலிருந்து முகுந்தன் கீழே இறங்கிவிட்டானா என்று பார்க்காமல் வாகன ஓட்டுனர் வாகனத்தை எடுத்துள்ளார். இதனால், கீழே விழுந்த முகுந்தன் மீது பின்பக்க சக்கரம் சிறுவனின் தலையில் ஏறியது. இதில் அவன் உயிரிழந்தான்.வாகனத்திற்கு ஓட்டுநரை நியமனம் செய்த பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவியாளரை நியமிக்கவில்லை. இது விதிமுறைகளுக்கு முரணானது.