சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில், ஐஐடி மாணவி மரணம் குறித்து அவருடைய தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை. மக்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டார்கள். அதிமுக உள்ளாட்சி தேர்தலிலும், அதற்கு அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும்.2021ல் சட்டமன்ற தேர்தலின்போது எந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் இருக்கும் என்று அப்போது தான் சொல்ல முடியும். எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அரசியலில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. ரஜினி வந்தால் எங்கள் சூழ்நிலையை பொறுத்து ஏற்றுக்கொள்வோம். அது கட்சி எடுக்கும் முடிவு. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுப்பது திமுக தான். அவர்கள் செய்துவிட்டு, எங்கள் மீது பழிபோடுகிறார்கள். தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.