பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான முறையில் உள்ள மின்பகிர்மான பெட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் அரசு கேபிள் டிவி அலுவலகம் மற்றும் அரசு உடற்பயிற்சிக்கூடம் அருகே மின் பகிர்மான பெட்டி உள்ளது. இங்கு முறையாக கேபிள் இணைப்பு மூலம் மின்சாரம் எடுக்காமல் மின் இணைப்பு பெட்டியை சுற்றி கேபிள்கள் மூலம் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்து அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கும், தமிழக கேபிள் டிவி அலுவலகத்திற்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. இந்த பெட்டிக்கு அருகாமையிலேயே தனியார் மழலையர் பள்ளியும். அதே சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும் உள்ளது. மழை காலம் என்பதால் சிறு மழைக்கே இப்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கும்.
இதனால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே வடச்சென்னை பகுதியில் 2017ம் ஆண்டு இதேபோன்று மின்சார பெட்டியில் தொங்கிய கேபிள்களால் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். இதேபோன்று வியாசர்பாடியில் 2015ம் ஆண்டு லட்சுமி என்ற பெண்ணும், ஒரு பசு மாடும் இறந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வட சென்னையில் மின்பகிர்மான பெட்டிகளால் ஏதாவது ஒரு உயிர் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.உயிரிழப்புக்களில் இருந்து பாடம் கற்காத அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக இந்த மின்பகிர்மான பெட்டியின் குறைகளை சரிசெய்து உயிரிழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? கொடுங்கையூரில் 2017ம் ஆண்டு ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்பகிர்மான பெட்டியின் கேபிள்களால் உயிரிழந்தபோது அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இனி மின் பகிர்மான பெட்டிகள் தரை தளத்திலிருந்து இரண்டு அடி உயரத்திற்கு மேலே தான் இருக்க வேண்டுமென மின்சார துறை சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதை மறந்த அதிகாரிகள் தற்போது மீண்டும் இரண்டு அடிக்கு கீழே கேபிள்களை உள்ளவாறு வேலை செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலையே பல பகுதிகளில் உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.