சென்னை: தலைநகர் டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 7 நாட்களாக காற்று மாசு சென்னையில் அதிகரித்து காணப்பட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறலால் கடும் அவதிப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் காற்றின் மாசு குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு செயலாளர் சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் செல்வம், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, ஐஐடி பேராசிரியர் சிவநாகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 8 இடங்களில் காற்று மாசை அளவை கணக்கிடும் நிலையங்கள் உள்ளது. இதில் 2 இடங்களில் காசு மாற்று அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சாலை பணிகள், கட்டிடப்பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தெளித்து தூசிகளின் அளவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.