சென்னை: சாலையில் பேனர் வைக்கும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 15ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக சாலையின் நடுவே மணமக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் ஒரு பேனர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது. இதையடுத்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து பேனர் வைப்பதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது. இதில் இவர்களது வருகையின் போது வரவேற்பு பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 14 இடங்களில் பேனர் வைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரிக்க தேவையில்லை. ஏற்கெனவே வைப்பதற்கு விதிமுறைகள் உள்ளது என்று தெரிவி்து வழக்கை முடித்து வைத்தனர்.