பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார். சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வறட்சி மற்றும் மழைக்காலங்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை ஏற்றம் காணும். அப்போதெல்லாம் பொதுமக்களின் நலன் கருதி அந்த பொருட்களை அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் பண்ணை பசுமை காய்கறி அங்காடிகளில் வழங்கி வருகிறது.

பண்ணை பசுமை கடைகளில் போதுமான அளவு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இருப்பு உள்ளது. இங்கு குறைந்த விலையில் மக்கள் காய்கறிகளை வாங்கி செல்லலாம்.  வெளிச்சந்தையைவிட தரமான வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40 என்ற குறைந்த விலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக இருப்பதாலும், பருவமழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையேற்றம் காணப்படுகிறது. இருப்பினும் விலையை கட்டுக்குள் வைக்கவும், அனைத்து காய்கறிகளும் தொடர்ந்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: