சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார். அவருக்கு வயது 87. இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிவரை பொறுப்பு வகித்தார். ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கமிஷனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் ‘பவர்’ என்ன எப்படி பட்டது என்று சாதாரண பொதுமக்களுக்கும் தெரியவந்தது. அந்த அளவுக்கு தேர்தல் ஆணைய நடவடிக்கையை வெளிப்படையாக்கினார். இவரது தந்தையின் பெயர் டி.எஸ். நாராயணய்யர். தாயார் சீதாலட்சுமி.