சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாறுதல் கவுன்சலிங் முன்னுரிமைப் பட்டியலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜீரோ ரேங்க் போடப்பட்டுள்ளதால் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னுரிமைப் பட்டியல் முரண்பாடுகளை களையவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதுநிலை பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டிய பணியிடமாறுதல் கவுன்சலிங் இந்தாண்டு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பல ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தற்போது பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2002ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் 400 முதுநிலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மேனிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது 2019ம் ஆண்டுக்கான மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.