ஆன்லைன் வர்த்தகத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இதனால் கடுமையான பாதிப்பு அடைந்தவர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள். தெருவில் ஊர்ந்து வரும் தள்ளுவண்டி கடைகளையும், ரோட்டோர பெட்டிக்கடைகளையும், தெருமுனைகளில் சாதாரண கடைகளையும் நடத்துபவர்களில் பெரும்பாலானோர், இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறிய கடைகளில் விற்கப்படும் ஆர்கானிக் காய்கறிகளை பார்த்து நாளாகி விட்டது. அவர்கள் ஆன்லைன் வர்த்தகர்களால் ஒதுக்கப்பட்டு விட்டனர். எளியவர்களை, சிறு வியாபாரிகளை அழிக்க முயற்சிக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாற்றுவழி என்ன என்பதை யோசித்து, உடனே அதை செயல்படுத்த வேண்டும். முகம் தெரியாதவர்களிடம் இருந்து பெறப்படும் பொருட்கள் தரமானவையா என்று நாம் ஆராய்வதில்லை. ஆன்லைன் மூலம் வாங்கி உபயோகிக்கும் பொருட்களால் சிறு வணிகர்கள், தள்ளுவண்டி மற்றும் பெட்டிக்கடைக்கார்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும். தங்கள் தொழிலை மட்டுமே நம்பி உழைக்கும் எளிய வியாபாரிகள், ஆன்லைன் வர்த்தகம் விஸ்வரூபம் எடுத்ததால், தங்கள் எதிர்கால வாழ்வை தொலைத்துவிட்டு, எங்கே செல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். நான் முதல்முறை சென்னைக்கு வந்தபோது, ரோட்டோரம் குவியல் குவியலாக வைத்திருந்த கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இன்றைய நிலையை பார்த்தால், அனைவரும் மாய உலகத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றுகிறது. இதில் வசமாக சிக்கிக்கொண்டு, இனி மீள முடியாது என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். ஆபத்தானது என்பதை என்றாவது அவர்கள் உணர்வர். நாள்தோறும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக சந்தைக்குள் தங்கள் கிளைகளை பரப்பி வருகின்றன. சிறு வணிகர்களை காப்பாற்ற என்ன வழி? இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று பல கேள்விகள் நீள்கின்றன.