சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா அட்டை வைத்து மறைக்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க மண்டல டிஐஜிக்களுக்கு பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான அலுவலகங்களில் இடைத்தரகர்களுடன் பதிவுத்துறை ஊழியர்கள் கைகோர்த்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கும் பதிவுத்துறைக்கும் ஏராளமான புகார்கள் சென்றது. இதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் இடைத்தரகர்கள் சர்வ சாதாரணமாக நடமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி சென்னை மண்டலத்தில் உள்ள 150 அலுவலகத்தை சாந்தோமில் உள்ள ஐஜி அலுவலகத்தில் இருந்தபடி பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பதிவு சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.