சென்னை: தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சண்முகம் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பருவமழை இந்த ஆண்டு சிறப்பாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தெரிவித்து வந்தது, சில பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் பெரும் பகுதியான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சம்பா சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.