சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் சினிமா நிறுவன அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது கமல் பேசியது: 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள். ஆனால் சினிமாவுக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. இந்த விருது தாமதமான கவுரவம். என்றாலும் தக்க சமயத்தில்தான் கவுரவித்துள்ளனர். ரஜினி பாணி வேறு, என் பாணி வேறு. நாங்கள் இருவரும் நிறைய சிரமங்களை கடந்தே இங்கு வந்தோம். இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்க முடிவெடுத்தபோது எங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அதாவது, ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். நாங்கள் யார் என்பதை புரிந்து வைத்துள்ளோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு நாங்கள்தான் முதல் ரசிகர்கள். அதேபோன்று ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம், விமர்சிப்போம்.