சென்னை: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வருவதையொட்டி முதல்வர் எடப்பாடி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அயோத்தி தீர்ப்பு எந்த நேரமும் வழங்கப்படலாம் என்ற சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர் காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.