திருவான்மியூர் ஓடை குப்பத்தில் ஊரை விட்டு ஒதுக்கியதால் மீனவர் தற்கொலை முயற்சி : பஞ்சாயத்தார் மீது போலீசில் புகார்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் ஓடை குப்பத்தை சேர்ந்தவர் ராமு (52). மீனவர். இவரது மனைவி சுமதி (45). இந்நிலையில் ராமுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ஊர் பஞ்சாயத்தார், ராமுவை அழைத்து விசாரித்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த ராமு, நேற்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமுவின் மனைவி சுமதி திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘எனது கணவரின் தற்கொலை முயற்சிக்கு மீனவ ஊர் பஞ்சாயத்தார் தான் காரணம். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: