விபத்து வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீடு தொகையில் பெரும் பகுதியை கட்டணமாக கேட்ட வக்கீல் நீக்கம்: தமிழ்நாடு பார்கவுன்சில் அதிரடி நடவடிக்கை

சென்னை: விபத்து வழக்கில் இழப்பீடாக வழங்கப்பட்ட  1 கோடியே 20 லட்சத்து 92,312ல் 66 லட்சத்து 15,574 வக்கீல் கட்டணமாக வழங்க கேட்டு மிரட்டல் விடுத்த புதுச்சேரி வக்கீலை தொழில் செய்வதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது. அதில் மனைவியை இழந்த பாரமண்ட் டிகோஸ்டா ஆண்டனி என்பவரை புதுச்சேரியில் அதே ஆண்டு புதிதாக வக்கீலாக பதிவு செய்த வக்கீல் காந்தி தாஸ் அணுகி இழப்பீடு பெற்று தருவதாக கூறியுள்ளார். அதன்படி, இது சம்பந்தமான வழக்கை தாக்கல் செய்ய ஆண்டனி அனுமதி வழங்கினார். இந்த வழக்கில் ஆண்டனி மற்றும் அவரது குழந்தைகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 92,312 வழங்க சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

 இந்நிலையில், இழப்பீடு தொகையில் 54.70 சதவீத தொகையான ₹66 லட்சத்து 15,574 வக்கீல் கட்டணமாக வழங்குமாறு வக்கீல் காந்தி தாஸ்,  ஆண்டனியை துன்புறுத்தி மிரட்டியுள்ளார். வழக்கு ஆவணங்களையும் தர மறுத்துள்ளார். இதுகுறித்து ஆண்டனி பார்கவுன்சிலில் புகார் அளித்தார். இந்த புகார் பார் கவுன்சில் ஒழங்கு நடவடிக்கை குழு தலைவர் பிரசில்லா பாண்டியன் தலைமையிலான குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புகாரை விசாரித்த ஒழுங்கு நடவடிக்கை குழு, வக்கீல் காந்தி தாசை பார் கவுன்சிலில் இருந்து நீக்கும்படி பார் கவுன்சில் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்கீல் தொழில் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த தொழிலில் கடமை, நேர்மை மிக முக்கியம். ஆனால், வக்கீல் காந்தி தாஸ் அனைத்து எல்லைகளையும் மீறி வக்கீல் தொழில் தர்மத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே, வக்கீல் தொழில் செய்வதிலிருந்து அவரை நீக்க வேண்டும். பார்கவுன்சிலில் அவரது பதிவை நீக்க வேண்டும் என்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: