சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கீதா தேவநாத் (56). இவர், நேற்று காலை டெல்லியில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் பிற்பகல் 1.5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். இவர், ஏர் இண்டியா விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் செல்ல ஒரே டிக்கெட் எடுத்திருந்தார். அந்த விமானம் சென்னையில் இருந்து 1.45 மணிக்கு பெங்களூரு புறப்படும். அதேபோல், கீதா தேவநாத் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இண்டியா விமானம் சென்னையிலிருந்து கோவைக்கு 1.45 மணிக்கு புறப்படும். ஆனால், கீதா தேவநாத், அது கோவை செல்லும் விமானம் என்பது தெரியாமல் தான் பெங்களூரு செல்வதாக நினைத்து விமானத்தில் இருந்து கீழே இறங்காமல் அப்படிேய அமர்ந்து விட்டார்.
விமானம் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதையில் ஓடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் விமான பணிப்பெண்கள் பயணிகளின் எண்ணிக்கையை சரிபார்த்தபோது கூடுதலாக ஒரு பயணி இருப்பது தெரியவந்தது. எனவே, விமானத்தில் இருந்த பயணிகளின் டிக்கெட்களை பரிசோதித்தனர். அப்போது கீதா தேவநாத், பெங்களூரு டிக்கெட்டில் கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தது தெரியவந்தது, உடனே, பணிப்பெண்கள், ‘‘நீங்கள் ஏன் சென்னையில் கீழே இறங்கவில்லை. இந்த விமானம் கோவை அல்லவா செல்கிறது’’ என்றனர். இதை கேட்டு கீதா தேவநாத் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி ஓடு பாதையிலேயே அவசர அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.