சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர மக்களுக்கு நிலத்தடி நீர், பருவமழை மூலம் கிடைக்கும் நிலத்தடி நீர் போன்றவை தான் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவிய போதும், எதிர்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க நவீன நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் உட்பட 12 ஏரிகளை 10 அடி அளவிற்கு ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.