போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் அரசு பின்வாங்காது :சுகாதாரத்துறை செயலர்

சென்னை :போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் அரசு பின்வாங்காது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணி முறிவு நடவடிக்கை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், பணியிடமாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்யும் திட்டம் அரசிடம் இல்லை என்றார். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. 8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிடமாறுதல் உள்ளிட்ட உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அரசு மருத்துவர்கள் முன்வைத்தனர்.அதில் பணிமுறிவு நடவடிக்கை மட்டுமே ரத்து செய்யப்படும் என்றும் பணியிட மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்ய முடியாது என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறிவிட்டார்.

Related Stories: