பென்னாகரம்: ஒகேனக்கல்லில் 32 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்தது. இந்நிலையில், நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று காலை, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்ததால் பரிசல் ஓட்டிகளின் நலன் கருதி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) அழகிரிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பின்பு ஒகேனக்கல் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பரிசலில் சென்று வர அனுமதி அளித்தனர். கடந்த 32 நாட்களாக இருந்த தடை விலக்கப்பட்டதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுற்றுலா வந்த ஏராளமானோர் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்தனர்.