ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள், குறைந்தளவு மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு சேதமடைந்தது.புயல் மழையால் விதிக்கப்பட்ட மீன்பிடி தடை நீங்கியதால் 5 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று 600க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். அன்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மறித்தனர். பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து மீனவர்களை விரட்டியடித்தனர்.