இப்படி பல முக்கிய விஷயங்களில் அரசு அதிரடியாக புதிய சட்ட விதிகளை கொண்டு வரும் போது, உயிர்ப்பலி வாங்கும் ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் கடுமையான சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது? பச்சிளம் குழந்தைகள் பலியாவதை ஏன் நிரந்தரமாக தடுக்க கூடாது?ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தனி சட்டம் உள்ளது. கோர்ட்டுக்கே போகாமல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அப்படி, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விட்டு விடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 2011ல் இருந்து பார்த்தால் பத்துக்கும் மேலாக ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் மூன்று குழந்தைகளை தவிர மற்ற பிஞ்சுகள் மீட்க முடியாமல் பலியாகின. 2014ம் ஆண்டு மட்டும் மூன்று சம்பவங்கள் நடந்தன.