புதுடெல்லி: ‘‘சமூக வலைதளங்களில் நீதிபதிகள் பற்றி கட்டுப்பாடற்ற விமர்சனங்களை செய்வது வருத்தம் அளிக்கிறது,’’ என உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளதால், 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சமூக இணையதளங்களில் நீதிபதிகள் விமர்சிக்கப்படுவது எனக்கு கவலை அளிக்கிறது. இது, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இதனால், நீதிபதிகள் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதை யாரும் விரும்புவது இல்லை. இவற்றை புறக்கணிக்கும் அளவுக்கு எல்லோரும் இருப்பது இல்லை. நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான்.