பாதியில் நிற்கும் அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் பாலம்

தர்மபுரி: அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் பாலம் கட்டுமான பணிகள் பாதியில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி - அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில், காலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், மேல்சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் போதும் அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங்கில் ₹9 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. இதனால், அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் மூடப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக கலெக்டர் பங்களா வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே, பாலம் கட்டுமான பணிகள், பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே கிராசிங் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: