தர்மபுரி: அதியமான்கோட்டை ரயில்வே கிராசிங் பாலம் கட்டுமான பணிகள் பாதியில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி - அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில், காலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், மேல்சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் போதும் அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.