வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு: திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.  இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. அதன் அடிப்படியில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஒருகிலோ பெரிய வெங்காயம் 40ரூபாயில் இருந்து 50ரூபாய்வரையில் விற்பனை செய்யப்பட்டது, தற்போது வரத்து குறைவின் காரணமாக ஒருகிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள்தோறும் 60 லாரிகளில் வந்த வெங்காய மூட்டைகள் தற்போது தொடர் மழை காரணமாக 30லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை விரைவில் கிலோ 100ரூபாயை எட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் தொடர் மழை காரணமாக அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த வாரங்களில் 50 முதல் 60ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: