சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி வருகிற 5 மற்றும் 8ம் தேதி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் செயல்பட்டு வரும் அதிமுக அரசின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அடுத்து வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை முன்னறிவிக்கும் வகையிலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 5.11.2019 (செவ்வாய்) மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்குநேரி தொகுதியிலும், 8.11.2019 (வெள்ளி) மாலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.