சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உத்திரபிரதேசத்தில் அதிகளவிலான குற்றவாளிகள் சிறைகளில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு சிறைகள் இருப்பதாகவும், ஆனால் குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறை கைதிகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவிகித கைதிகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ளது. ஆனால் 13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். இதில் 601 பெண் கைதிகள் மற்றும் 112 வெளிநாட்டு கைதிகள் தமிழக சிறைகளில் உள்ளனர்.