சென்னை: முதல் தவணை காலம் முடிந்த நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் கோடையிலும் முற்றிலும் வறண்டதால் சென்னை மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் இந்த ஏரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழையால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பில்லை. இருந்தபோதிலும், கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
முதல் தவணை காலமான ஜூன் முதல் அக்டோபர் வரை, ஒப்பந்தப்படி ஆந்திர அரசு 8 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், கண்டலேறு அணையில் உள்ள நீர் இருப்பை காரணம் காட்டி ஆந்திரா முறையாக தண்ணீர் வழங்குவதில்லை. இருப்பினும், இந்த ஆண்டு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்கப்பட்டு 567 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.