விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டி நீரில் மூழ்கி சிறுவன் சாவு

விருதுநகர்: விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக தோண்டிய குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் பலியானான். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ருத்ரன் (3). தீபாவளி பண்டிகையையொட்டி ஒண்டிப்புலிநாயக்கனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, மூர்த்தி குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ருத்ரன் திடீரென மாயமானான். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க தோண்டிய 4 அடி ஆழ குழிக்குள் தேங்கி கிடந்த நீரில் ருத்ரனை குடும்பத்தினர் தேடினர். அதில் ருத்ரன் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. சிறுவனை மீட்ட குடும்பத்தினர் கன்னிசேரிபுதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் ருத்ரன் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் இறந்துள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து சிறுவன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: