கூடங்குளம் அணுமின் கணினிகளுக்குள் சைபர் தாக்குதல்: விரிவான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்...மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் வடகொரியாவைச் சேர்ந்த லாசரசு எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு டி ட்ராக் என்னும் வைரசால் கூடங்குளத்தின் தகவல்கள் திருடப்பட்டதாக சில தனியார்  சைபர் அமைப்புகள் தெரிவித்தன. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. ஆனால் கூடங்குளம் அணுவுலை நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கூடங்குளம் அணு உலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளிவந்த தகவல் பொய்யானது. கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் தனித்துவமானது வெளியிலிருந்து அதனை ஹேக் செய்ய முடியாது என  குறிப்பிட்டுள்ளது.

இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர் உள்ளிட்ட யாரும் திருட வாய்ப்பில்லை என அணுமின் நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூடங்குளத்தில் அணுமின் தொழில்நுட்பம் தொடர்பான  தகவல்கள் ஏதும் இணையத்தில் வைக்கப்படவில்லை. நிர்வாகம் தொடர்பான தகவல்கள் மட்டுமே இணையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அணுமின் நிலையத்தின் முதல் உலையில் 1000 மெகாவாட்,  2வது அணுஉலையில் இருந்து 600 மெகா வாட் அளவில் மின்உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒரு கணினியில் வைரஸ் இருந்தது உண்மைதான் என்றும் நிர்வாக  தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கணினியில் மட்டும் வைரஸ் தாக்குதல் என இந்திய அணுமின் சக்தி கழகம் விளக்கம் அளித்தது. நேற்று அணுமின் நிலையம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்திய அணுமின் சக்தி  கழகம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் கழக கணினிகளுக்குள் சைபர் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கூடங்குளம் அணுமின் கழக தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடு  உள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். சைபர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: