வலங்கைமான்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு கோயிலில், நேற்று அதிகாலை குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இது நவக்கிரகங்களில் குருபரிகார ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை குருப்பெயர்ச்சி என்கிறோம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று (29ம் தேதி) அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். அப்போது குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கலங்காமற் காத்தவிநாயகர், ஏலவார்குழலி, சுப்ரமணியர், ஆபத்சகாயேஸ்வரர் சுவாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்திலும், குருபகவான் தங்ககவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.