ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் வருகை?: மதுரை கலெக்டர் பேட்டி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் புதின் வருவது தொடர்பாக, எந்த தகவலும் இதுவரை வரவில்லை என மதுரை கலெக்டர் வினய் தெரிவித்தார். சீன அதிபர் ஜின் பிங், பிரமதர் மோடி இம்மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில்  சென்னை அருகே மாமல்லபுரத்தில் சந்தித்து, அங்குள்ள சிற்பங்களை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜன. 17ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டை ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி பார்வையிடுவதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக மதுரை கலெக்டர் வினய் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ரஷ்ய அதிபர் வருவது தொடர்பான தகவல் இதுவரை மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை. உலகின் முக்கிய தலைவர்கள் வருகிறார்கள் என்றால், முன்கூட்டியே பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு குறித்து, ஆலோசனை நடத்திய பிறகுதான் பயணம் முடிவு செய்யப்படும். ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.

Related Stories: