மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் தம்பதி உயிரிழந்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ஏழுமலை (60), இவரது மனைவி புஷ்பா (55) ஆகியோர் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (27) என்பவர் காரை ஓட்டிச்சென்றார். இவர்களது கார், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்தூர் அடுத்த தொழுப்பேடு மேம்பாலம் அருகே இன்று அதிகாலை வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சென்டர் மீடியனில் மோதியது. இதன்பிறகு தறிகெட்டு பாய்ந்த கார், அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் மீது மோதி நொறுங்கியது.இந்த விபத்தில் காரில் இருந்த ஏழுமலை, புஷ்பா ஆகிய இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். டிரைவர் தினேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.