சென்னை: சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கோயம்பேடு ஆம்னி பஸ் ஏஜென்ட்கள் சங்க தலைவரான இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ம் ஆண்டு கோயம்பேடு உதவி போலீஸ் கமிஷனராக இருந்த மோகன்ராஜ், எஸ்ஐ செல்லத்துரை ஆகியோர் எங்கள் சங்க உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். என்னையும், சங்க உறுப்பினர்கள் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். பின்னர் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏஜென்ட் பணியை செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் உதவி போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ், எஸ்ஐ செல்லத்துரை ஆகியோர், மனுதாரர் மற்றும் அவர் சார்ந்த சங்க உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் சட்டப்படி செயல்படாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனுதாரருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். எனவே, இருவருக்கும் சேர்த்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு ரூ.20 ஆயிரத்தை உதவி கமிஷனர் மோகன்ராஜிடம் இருந்தும், ரூ.10 ஆயிரத்தை எஸ்ஐ செல்லத்துரையிடம் இருந்தும் வசூலித்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.