தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

சென்னை: ‘மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். தீபாவளியின்போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையின்போது இறைவனை வணங்குவதுடன், பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். பட்டாசுகளை வெடிப்பதால், நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மாசுபடுகிறது. இதையடுத்து தமிழக அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம் செய்தது.

இந்த ஆண்டும் இதேபோல் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அைமப்புகளின் முன்அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: