சென்னை: தமிழகத்துக்கு அக்.30ம் தேதி வரை கிருஷ்ணா நீர் வரும் என்றும், இதுவரை 1.33 டிஎம்சி தண்ணீர் ஆந்திரா தந்துள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். இதில், முதல் தவணைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தர வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணைகாலத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்ைக வைத்தது. இதையேற்று, கடந்த 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் 500 கன அடி திறந்து விடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது. இந்த தண்ணீரை ஆந்திர எல்ைலயோர கால்வாய்பகுதிகளில் விவசாயிகள் மோட்டார் மூலம் உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளது. இதை தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி 701 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் தற்போது, 1.33 டிஎம்சி வரை தமிழகத்துக்கு வந்துள்ளது.