குடந்தை அருகே பரபரப்பு காரில் வந்து கோயிலில் இருந்து ஆஞ்சநேயர் சிலை திருடிய கும்பல்

கும்பகோணம்: குடந்தை அருகே காரில் வந்து கோயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன் சன்னதி பிரசித்தி பெற்றது. இங்கு மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னதியில்  ஆஞ்சநேயர் சிலை ஒன்று சுவரில் (கோஷ்டத்தில்) பதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 8 மணிக்கு கோயில் குருக்கள் கணேசன் சன்னதியை சுற்றி வந்தபோது கோஷ்டத்தில் இருந்து ஆஞ்சநேயர் சிலை மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அங்குள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்தார். பின்னர்,  கோயில் அதிகாரிகள் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது, இரவு 7 மணிக்கு ஒரு இண்டிகா காரில் வந்த 5 பேர், (2 பேர் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். 3 பேர் பேண்ட் சர்ட் அணிந்திருந்தனர்.) நேராக மூலவர் சன்னதி அருகே வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர், அவர்கள் 5  பேரும் ஆஞ்சநேயர் சிலை இருந்த இடத்திற்கு சென்றனர். 3 பேர் சுவரை மறைத்துகொண்டு நின்றனர். 2 பேர் அந்த சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து தயாராக வைத்திருந்த கட்டை பைக்குள் வைத்துக்கொண்டு வெளியே நின்றிருந்த  காரில் ஏறி 5 பேரும் சென்றுவிட்டனர். கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இருந்தும் 30 நிமிடத்தில் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.

இதுகுறித்து இன்று காலை பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஒரு தனிப்படைஅமைத்துள்ளார்.  கொள்ளையடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 1 அடிக்கு சற்று உயரமாக இருக்கும் கல் சிலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் இது பிரசித்திபெற்றதாக கருதப்படுகிறது.

Related Stories: