எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்: நிறுவனர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்

சென்னை: எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள்  பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மற்றும்  பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் ஏற்கனவே நடிகர் விஜய்க்கு 2007-ம் ஆண்டில் டாக்டர் பட்டமும், 2017-ம் ஆண்டில் நடிகர் விஜயகுமாருக்கும்  டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது. அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில  நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.

அக்டோபர் 20-ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்பியுமான ஏ.சி.சண்முகம்  தெரிவித்தார். இந்நிலையில், சென்னை வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,  எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, காவல் ஆணையர்  விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: